ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்காக நின்ற பக்தர் மூச்சுத் திணறி உயிரிழந்தது வேதனையான சம்பவம். முன்னதாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வைக்கப்படுவதை திருச்செந்தூரில் பக்தர்கள் தெரிவித்தபோது, அமைச்சர் சேகர் பாபு, திருப்பதியில் நிற்பான் இங்கே என்னவாம் என்று ஒருமையில் பேசியதோடு, மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் அமைச்சர் என்கிற மமதையில் பேசி பக்தர்களை அவமரியாதை செய்தார்.
உரிய முன்னேற்பாடு செய்யாத திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி தேவஸ்தானத்தையும், ராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகத்தையும், இந்து சமய அறநிலையத்துறையையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். இந்த உயிரிழப்பு சம்பவங்களுக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்று இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.