அரியலூரில் டெங்கு காய்ச்சலின் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மேலும் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 8 பேர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை பணியாளர்கள் மூலம் கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. காலை மற்றும் மாலை தான் ஏடிஸ் கொசு அதிகளவில் கடிக்கிறது. அந்நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.