அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் தொன்மையான பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலை ஏழைகளின் திருப்பதி என்று அழைப்பது வழக்கம். கிராமத்து விவசாயிகள் தங்களது வெள்ளாமை நோயின்றி நல்ல மகசூல் கிடைக்க, கலியுக வரதராஜ பெருமாளை வேண்டிக் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.
பின்னர் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, வயலில் விளைந்த தானியங்களையும், கால்நடைகளையும் நேரில் வந்து சாமி தரிசனம் செய்த பிறகு காணிக்கையாக செலுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான இன்று(அக்.05) அதிகாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் மூலவரான கம்ப வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ததோடு, உற்சவர் கொலு மண்டபத்தில் கொலு பொம்மைகள் நடுவில் அமர்ந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதியை குடும்பத்துடன் தரிசனம் செய்து வழிபட்டனர்.
பின்னர் தங்களது வயல்களில் விளைவித்த தானியங்களையும், ஆடு, மாடு, கோழிகளையும், காணிக்கையாக வழங்கி சென்றனர். சேலம் கடலூர் திருச்சி நாகை மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட அரியலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.