அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் சைக்கிள் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 14-ந்தேதி காலை 7 மணியளவில் நடைபெறுகிறது. இந்த போட்டி 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக நடத்தப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிளாகவும், இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியானது 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி. மீ. , மாணவிகளுக்கு 10 கி. மீ. , 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி. மீ. , மாணவிகளுக்கு 15 கி. மீ. , 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி. மீ. , மாணவிகளுக்கு 15 கி. மீ. என்ற தொலைவுகளின் அடிப்படையில் நடைபெறும். போட்டி நடைபெற இருக்கும் தடங்கள் பற்றி போட்டிநாள் அன்று தெரிவிக்கப்படும். இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரமும் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ. 250 வீதம் காசோலையாகவோ அல்லது வங்கி மூலமாகவோ வழங்கப்படும்.