தஞ்சை: கழிவுநீர் கலந்து குப்பை தொட்டியான சிங்கபெருமாள் குளம்

தஞ்சை சிங்கப்பெருமாள் குளம் முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைகளால் நிரம்பி காட்சியளிக்கிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சையில் மிகப் பழமையான சிங்கப்பெருமாள் கோயில் குளம் உள்ளது. அருகில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்ப்பிற்காக ஏலம் விடப்பட்டு முறையான பராமரிப்போடு இருந்தது. 

கோடைகாலம் ஆனாலும் வற்றாமல் எப்போதும் தண்ணீர் இந்த சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் இருந்து கொண்டே இருக்கும். தற்போது மீன் வளர்ப்பு ஏதும் நடைபெறாததால் இக்குளம் தொடர்ந்து பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. முக்கியமாக இப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் குளத்தில் அதிகளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவ்வாறு சிலர் செய்யும் செயல்களால் குளம் நாசமடைந்து வருகிறது. பழமையான இந்த குளத்தில், குப்பைகள் கொட்டுவதையும் கழிவுநீர் விடுவதையும் தடுத்து நிறுத்தி, குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களும் பழமையான இந்த குளத்தின் அருமை தெரிந்து அதனை பாதுகாக்க முன்வர வேண்டும்.

தொடர்புடைய செய்தி