ஓமலூர்: அதிகாரிகளுக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள்

ஓமலூரை அடுத்த காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் விமான நிலையம் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. 

இதைத்தொடர்ந்து விரிவாக்க பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த் துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள விவசாய தோட்டங்களில் மரங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளை கணக்கீடு செய்ய அதிகாரிகள் வருவதும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் திரும்பி செல்வதுமாக இருந்து வருகிறது. 

இது ஒரு புறம் இருக்க அதிகாரிகள் வாரத்திற்கு 2, 3 நாட்கள் நில அளவீடு செய்ய வருவதும் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு இடத்திற்கு செல்வதுமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 23)  சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூர் பகுதியில் நில அளவீடு செய்வதற்காக சேலம் விமான நிலைய விரிவாக்க அலுவலர் பொன்னுசாமி மற்றும் வருவாய் துறையினர் வந்தனர். 

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி விவசாயிகள், அதிகாரிகளுக்கு கருப்புக்கொடியை காட்டி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் வேறு இடத்தில் நில அளவீடு செய்ய புறப்பட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி