மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில் தொடர்ந்து ராமநாதபுரம் நோக்கி இரு வழிச்சாலை செல்கிறது. வாகன ஓட்டிகள் நான்கு வழிச்சாலையை வேகமாக கடந்த நிலையில் இரு வழிச்சாலையிலும் அதே வேகத்தில் செல்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்து நடந்து வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு முன்பு சத்திரக்குடி பகுதி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல கிராமங்களில் இருந்து மக்கள் பொருட்களை வாங்கிச் செல்லும் சந்தையாக இருக்கிறது. மேலும் அரசு, தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், மஹால், வங்கிகள், கமிஷன் மண்டிகள் என ஒரே இடத்தில் உள்ளன. இதனால் இரண்டு ஓரங்களிலும் டூவீலர் உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.
பஸ் நிறுத்தம் முழுவதும் மற்றும் அருகிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் ராமநாதபுரம் செல்லும் வழியில் மட்டும் பஸ் நிறுத்தம் உள்ள நிலையில் எதிர்திசையில் பஸ் நிறுத்த இடவசதியின்றி உள்ளது. இதனால் பயணிகள் நிற்க இடமின்றி தவிக்கின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தை முறைப்படுத்துவதுடன் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.