கள்ளக்குறிச்சி: பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று (ஜனவரி 10) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவைக்குப்பின் 4:15 மணிக்கு பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க பரமபத வாசலை கடக்கும் வைபவம் நடந்தது. 

தொடர்ந்து, பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன் உட்பிரகாரம் வலம் சென்று ஆண்டாள் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பின்னர் சாற்றுமுறை சேவை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவில், நீலமங்கலம் சீதா லஷ்மன கோதண்டராம கோவில், விருகாவூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி